செய்திகள்
ஈழத் தமிழரை கைவிட்டது கூட்டமைப்பு! சிறீலங்கா அரசிற்கு எதிராக ஜெனீவாவில் பேச மறுப்பு!!
ஜெனிவாவில் நாளை மறுநாள் ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்காது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.
சிறீலங்கா அரசிற்கு எதிரான நிலைப்பாட்டை இன்று பல மேற்கத்தேய நாடுகளே எடுத்துவரும் நிலையில் ஈழத் தமிழர்களின் அரசியல் பிரதிநிதிகளாக தம்மைக் கூறிக்கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இவ் அறிவித்தலானது ஈழத்தமிழரை மட்டுமன்றி உலகமெங்கும் பரந்துவாழும் தமிழ் மக்களை அதிர்ச்சியிலும், ஏமாற்றத்திலும் உறையவைத்துள்ளது.
இதன் காரணமாக தமக்காக என்றும் குரல்கொடுப்ப்ஆர்கள் என நம்பி வாக்களித்த ஈழத்தமிழர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைவிட்டுள்ளது.
இது தொடர்பில் அவர் உன்றுவெளியிட்டுள்ள வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஜெனிவாவில் பெப்ரவரி 27 தொடக்கம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைகள் மன்றத்தின் 19 ஆம் கூட்டத்தொடரில் சிறிலங்கா தொடர்பான விடயம் முக்கிய இடம் வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு அறிக்கை மற்றும் சிறிலங்கா அரசினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை ஆகிய இரு அறிக்கைகளும், அனைத்துலக மனிதநேய மற்றும் மனித உரிமைகள் சட்டம் ஆகியவற்றை மீறியமை, இனப்பிரச்சினைக்கான காரணிகள், மெய்யான நல்லிணக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய அரசியற்தீர்வொன்றை அடைதல், இராணுவ மயமாக்குதலை நீக்குதல், துணை ஆயுதக்குழுக்களை கட்டுப்படுத்தல், குடியியல் நிர்வாகத்தை வலிவூட்டுவதற்கான அத்தியாவசியத் தேவை, தகவல் சுதந்திரம், ஊடக சுயாதீனம், தடுப்பு சம்பந்தமான வெளிப்படைத்தன்மை, மேலும் தடுத்து வைத்துள்ளவர்களைச் சந்திக்கும் சுயாதீனம் உட்பட வேறு விடயங்களையும் உள்ளடக்கியுள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதித்துவப்படுத்தி நிற்கின்ற – இனப்பிரச்சினையினால் பிரதானமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த விடயங்கள் மிக முக்கியமானவையாகும்.
யுத்தமும் அது தொடரப்பட்ட முறையும் அவர்களுக்கு பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.
இப்படியான விடயங்கள் கலந்துரையாடப்படும் எந்த தொடர் நிகழ்வுகளைப் பற்றியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நியாயமான கரிசனையைக் கொண்டுள்ளது.
இந்த இரு அறிக்கைகள் தொடர்பிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டைப் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளதுடன் அதன் நிலைப்பாட்டினை மீளவும் வலியுறுத்துகிறது.
கடந்த ஆறு பத்தாண்டுகளாக சிறிலங்கா அரசானது சிறிலங்காவுக்குள் இருக்கும் பல்தேசிய, பல்கலாசார பன்மைச் சமுகத்துக்கான தனது கடப்பாடுகளை நிறைவேற்றத் தவறியுள்ளமையும், அனைத்துலக உடன்படிக்கைகள் மற்றும் அது கைச்சாத்திட்டுள்ள அனைத்துலக உடன்பாடுகள் ஆகியவற்றை மீறிச்செயற்படுவது கவலைக்குரிய விடயங்கள் என்பதையும், இதனால் தான் தற்போதைய நிலைமைக்கு சிறிலங்கா முகம்கொடுக்க நேர்ந்துள்ளது என்பதையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேலும் கூறிவைக்கிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய இலங்கைக்குள் நிலைத்து நிற்கத்தக்கதும் நடைமுறைக்கு ஏதுவானதுமான நேர்மையான அரசியற்தீர்வைக் கண்டடைவதற்கான தனது அர்ப்பணத்தைப் பகிரங்கமாகக் கூறிவந்துள்ளதுடன், அதனை அது மீளவும் வலியுறுத்துகிறது.
ஒரு வருட காலத்துக்கு மேலாக அரசாங்கத்துடன் சேர்ந்து அத்தகைய தீர்வைக் கண்டடைவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆக்கபூர்வமான வழிமுறைகளிலே முயன்றும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய அரசியற்தீர்வை கண்டடைவதிலே அரசுக்கு நேர்மையான அர்ப்பணிப்பு இல்லாமையினால் அது எவ்வித முன்னேற்றத்தையுமே காணவில்லை.
தானே ஏற்றுக்கொண்ட பொறுப்புக்களை மீறுவதில் சிறிலங்கா அரசாங்கம் பெயர் போனது. அதுமட்டுமன்றி, பொறுப்புக்கூற வேண்டிய கடப்பாட்டை பகிரங்க அறிக்கைகள் மூலமாக நிறைவேற்றுவதிலும் அது பெயர் போனது.
தற்போது நிலவும் நிலையற்ற நிலைமை தொடருமேயானால் அது வன்முறைக்கு வித்திடலாம், குடிமக்கள் அதனால் மீண்டும் பாதிக்கப்படலாம் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அஞ்சுகிறது.
தற்போதைய சூழ்நிலையிலே அமைதி காக்கப்படுவதும், பிரச்சினைகளைத் தவிர்ப்பதும் அவசியமான செயற்பாடுகளென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருதுகிறது.
எனவே, இந்தக் காரணங்களால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனிவாவில் பிரசன்னமாயிருக்கமாட்டாது எனத் தீர்மானித்துள்ளது.
நாடு தற்போது இருக்கும் நிலைமைக்கு சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளும், மேற்கொள்ளத் தவறிய நடவடிக்கைகளும் மட்டுமே மூலகாரணம் என்பதை நாட்டுமக்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.
இனப்பிரச்சினைக்கான இறுதித்தீர்வை எட்டுவதில் எவ்வித தடையையும் அரசதரப்பு போடக் கூடாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுக்கிறது.“ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






