செய்திகள்
பேராளர்களால் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு அறிக்கைகள் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை அவையில் சமர்ப்பிக்கப்பம். – ரொட் றோஸ்
கனடிய மனிதவுரிமை மையம் அண்மையில் கனடியப் பாராளுமன்றில் நடாத்திய சிறீலங்கா மனிதவுரிமை மீறல்கள் குறித்த மாநாட்டில் பேராளர்களால் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு அறிக்கைகள் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை அவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கனடிய மனிதவுரிமை மையப் பேச்சாளர் ரொட் றோஸ் தெரிவித்தார்.
கனடிய மனிதவுரிமை மையத்தால் நடாத்தப்பட்ட மாநாட்டில் பேராளர்களால் அங்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளை கனடாவின் ஐ.நா.விற்கான பணியகம் பார்வையிட்டு அந்த அறிக்கைகளில் இரண்டை ஐக்கிய நாடுகள் அவையின் மனிதவுரிமை அவைக்குச் கனடா சார்பில் சமர்ப்பித்துள்ளது.
கனடாவின் ஐ.நா.விற்கான பணியகத்தால் சுயாதீனமாக மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை கனடிய மனிதவுரிமை மையத்தின் [www.chrv.ca ] பணிக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும் எனத் தெரிவித்த அதன் பேச்சாளர் திரு. ரொட் றோஸ் அவர்கள்,
இது தங்களை மேலும் மேலும் இந்த விவகாரத்தில் சர்வதேச ரீதியாக செயற்படுவதற்கு உந்துதுணையாக அமைந்துள்ளதாகவும், 2009ல் ஒரு சிறிய அமைப்பாக ஆரம்பிக்கப்பட்ட கனடிய மனிதவுரிமை மையம் இன்று சர்வதேச அந்தஸ்துடன் செயலாற்ற ஆரம்பித்துள்ளதானது மனிதவுரிமை மறுக்கப்பட்ட மக்களிற்கு ஒரு விடிவாகும் எனத் தெரிவித்தார்.
சர்வதேச மன்னிப்புச் சபையைச் சேர்ந்த அலெக்ஸ் நிவி மற்றும் இலங்கை விவகாரத்தில் அதீத அக்கறையுடன் செயற்பட்டு வரும் முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினரான திரு. டேவிட் கில்கர் ஆகியோரது அறிக்கைகளே ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை அவையினருக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கனடிய மனிதவுரிமை மையத்தின் இந்த ஆண்டிற்கான திட்டங்களின் அடிப்படையில் இந்தியாவிலுள்ள மனிதவுரிமை ஆர்வலர்களினூடான, அரசினூடான செயற்பாடுகளை முன்னெடுக்கும் ஆரம்பப் பணிகளை முன்னெடுப்பதற்காக இந்த அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளரான திரு. ஸ்ரான் முத்துலிங்கம் ஈடுபட்டு இந்திய விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.






