முக்கிய செய்திகள்
இலங்கைத் தமிழர் விவகாரத்தில் இந்தியா தீவிரமாக அக்கறை செலுத்த வேண்டும். – அப்துல் கலாமிடம் கூட்டமைப்பு கோரிக்கை!
இலங்கைத் தமிழர் விவகாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு இந்தியா தீவிரமாக அக்கறை செலுத்த வேண்டும். அதற்கான செயற்பாடுகளே இன்று அவசியமாகும் என்று இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமிடம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கைக்கு நான்குநாள் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ள அப்துல் கலாமை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்றிரவு சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் சுமார் 7.30 மணியளவில் இச்சந்திப்பு இடம்பெற்றது.
இச்சந்திப்பு குறித்து சம்பந்தன் எம்.பி.கருத்து தெரிவிக்கையில், இந்திய குடியரசின் முன்னாள் தலைவர் டாக்டர் அப்துல் கலாமுடனான சந்திப்பின்போது தமது யாழ். விஜயம் தொடர்பில் மகிழ்ச்சியும் திருப்தியும் வெளியிட்டார்.
இந்த சந்தர்ப்பத்தில் நாட்டின் தற்கால அரசியல் நிலைவரங்கள் மற்றும் பொதுவான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. நீண்ட காலமாக இழுபறிக்குள்ளாகி வரும் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விவகாரம் தொடர்பில் தமிழரின் நிலைப்பாடு மற்றும் எதிர்பார்ப்புகளை டாக்டர் அப்துல் கலாமுக்கு மிகத் தெளிவாகவும் விரிவாகவும் எடுத்துக் கூறினேன்.
இலங்கையில் தமிழ் மக்களால் எதிர்நோக்கப்படுகின்ற பிரச்சினைகள் மற்றும் அரசியல் ரீதியிலான தீர்வு விவகாரங்கள் தொடர்பில் இங்கு மாற்றம் ஒன்றினை ஏற்படுத்துவதற்கு இந்தியா தனது முழுமையான அக்கறையைச் செலுத்த வேண்டும்.
இலங்கைத் தமிழர் மீது இந்தியா தமது அதிகமான ஈடுபாட்டினைக் காட்ட வேண்டும் என்றும் அதற்குத் தாங்கள் உறுதுணையாகத் திகழ வேண்டும் என்றும் டாக்டர் கலாமிடம் கேட்டுக்கொண்டேன். கூட்டமைப்பு சார்பிலான எனது சகல கருத்துக்களையும் டாக்டர் கலாம் மிகவும் பொறுமையாக கேட்டு அறிந்துகொண்டார். அத்துடன் தற்போது சிக்கலில் இருக்கின்ற காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பிலும் எனது விளக்கத்தை மிகக் கவனமாக கேட்டு அறிந்துகொண்டார்.
அதுமாத்திரமன்றி இலங்கைத் தமிழர் விவகாரத்தில் இந்தியாவின் பங்களிப்பு எந்தளவுக்கு அவசியப்படுகின்றது என்பதையும் கலாமுக்கு எடுத்துக் கூறினேன். தமிழர் விவகாரத்தில் இந்தியாவின் பங்களிப்பு தேவைப்பட்டிருப்பதை டாக்டர் கலாம் ஏற்றுக்கொண்டார். அவருடனான இச்சந்திப்பு மிகவும் சிநேகபூர்வமாக அமைந்த அதேவேளை மிகவும் திருப்தியளிக்கக் கூடியதாகவும் இருந்தது என்றார்.
இச்சந்திப்பில் அப்துல் கலாமுடன் இந்தியத் தூதுவர் அசோக் கே.காந்தா பிரதித் தூதுவர் பி.குமரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.



